மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை 11.30 மணியளவில் மடு திருத்தலத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.
மேலும் பிரதேச செயலாளர்கள்,நானாட்டான் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், இராணுவம், கடற்படை, பொலிஸ் அதிகாரிகள், வைத்தியர்கள், சுகாதார துறையினர், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மடு திருத்தலத்தில் ஆவணி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தர உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் வருகை தரும் மக்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு முன்னெடுக்க வேண்டிய அவசிய தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக மடு திருவிழா காலப்பகுதியில் பாடசாலைகள் விடுமுறை என்பதால் இலட்சக்கணக்கான மக்கள் தற்போது மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.இந்த நிலையில் திருவிழா நாட்களில் மக்களின் வருகை அதிகரிக்கக்கூடும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து,சுகாதாரம்,மருத்துவம்,தங்கும்இடம்,குடி நீர்,மின்சாரம் மற்றும் பாதுகாப்பு விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் மடு திருத்தலத்திற்கு திருவிழா காலப்பகுதியில் வருகை தரும் ஒருங்கிணைக்கப்பட்ட திருடர்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பிச்சையெடுப்போர் தொடர்பாகவும் விசேட கவனமெடுத்து அதனைத் தடுப்பதற்குரிய விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.
மேலும் தற்போது நாட்டில் டெங்கு நோய் நிலைமை ஒரு நெருக்கடியான நிலையில் இருப்பதால் தற்போது வெளி மாவட்டங்களில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருவதால் இங்கே எவ்விதமான டெங்கு நோயும் பரவாமல் இருப்பதற்குரிய ஏற்பாடுகளும் சுகாதாரத்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்து ஆராயப்பட்டது.
இதனைவிட பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில், நியாயமான கட்டுப்பாட்டு விலையில் நியாயமான நிறையுடன் விற்பனை செய்வதற்குரிய ஏற்பாடுகளும், அதை கண்காணிப்பதற்கு உரிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டமை குறித்து ஆராயப்பட்டது.
மேலும் மடு புனித பிரதேசம் என்பதால், இந்தப் பிரதேசத்துக்குள் மதுபானங்கள் அல்லது போதை பொருட்கள் எடுத்து வருவதை முற்றாக தவிர்க்கப் பட்டிருக்கிறது.
அதை மீறுவோர் மீது உடனடியாக சட்ட ஏற்பாடுகள் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் உரிய தரப்பினர் குறித்த விடயங்கள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 ஆம் திகதியிலிருந்து இங்கே நடமாடும் (சுற்றுச்சல்) நீதிமன்றம் நிறுவப்பட்டு, அதன் ஊடாக சட்டத்தை மீறுவோர், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துகின்ற வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.
மடு அன்னையின் ஆவணித் திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் தொடர்ந்து மாலை நவநாள் இடம்பெற்று வருகின்றது.14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும்,15 ஆம் திகதி காலை திருவிழா திருப்பலியும் ஆயர்கள் தலைமையில் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.











