இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தவும், சரக்கு கையாளும் திறனை அதிகரித்து வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் மத்திய அமைச்சரவை சுமார் ரூ. 13,000 கோடி மதிப்பிலான பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை வரவேற்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதுடன், லட்சக்கணக்கான மக்களின் அன்றாடப் பயணத்தை எளிதாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள திட்டங்களில், ரூ. 9,450 கோடி மதிப்பிலான நான்கு முக்கிய ரயில்வே பலவழிப் பாதை திட்டங்கள் அடங்கும்.
இதன் மூலம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள ரயில்வே நெட்வொர்க் வலுவடையும்.
குறிப்பாக கும்மிடிப்பூண்டி – கூடூர் இடையிலான 90 கி.மீ தொலைவிலான 3-வது மற்றும் 4-வது வழித்தடம், கரக்பூர் – பத்ரக் இடையிலான 173 கி.மீ வழித்தடம் மற்றும் பத்ரக் – ஹரிதாஸ்பூர் இடையிலான நான்காவது வழித்தடம் ஆகிய திட்டங்கள் மூலம் ரயில் நெரிசல் கணிசமாகக் குறைக்கப்படும்.
இத்துடன் பீகார் மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை 22-ன் முசாஃபர்பூர் – சீதாமர்ஹி – சோன்பர்சா பிரிவில் ரூ. 3,590.73 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சாலை மேம்பாடு இந்தியா-நேபாள எல்லைப் பகுதிகளுடனான தடையற்ற இணைப்பை உறுதி செய்வதோடு, பயண நேரத்தையும் பாதியாகக் குறைக்கும்.
பிஎம்-கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த வழித்தடங்கள் தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.











