வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களை அந்த நிலையிலிருந்து மீட்டெடுத்து, அவர்களைச் சுயமாக இயங்கக்கூடிய பொருளாதார நிலைக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அமைச்சரின் 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், 6 இலட்சம் ரூபா செலவில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி சமூகத்தினரின் பயன்பாட்டிற்காக உளவள ஆற்றுப்படுத்தல் மையத்தை நிறுவுவதற்குத் தேவையான உபகரணங்கள் யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில் வைத்து பாடசாலை சமூகத்தினரிடம் கையளிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஸ்வெசும திட்டப் பயனாளிகளுக்கான வாழ்வாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அத்துடன், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் ‘சிப்தொர’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரக் கல்வியைத் தொடரும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு 24 மாத காலத்திற்கான புலமைப்பரிசில் கொடுப்பனவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்,
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களும் அதிகளவில் காணப்படுகின்றன.
வெளிப்புறத்தில் ஆடம்பரமான கட்டுமானங்கள் காணப்பட்டாலும், அதன் பின்னணியில் இன்றும் பல குடும்பங்கள் வறுமையிலும் கல்வியில் பின்தங்கிய நிலையிலும் வாழ்ந்து வருகிறது, வறுமையும் கல்விப் பின்னடைவும் காணப்படும் பகுதிகளில் போதைப்பொருள் பாவனையும் வியாபாரமும் ஊடுருவி, இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழித்து வருகிறது.
மாணவர்கள் போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்குகளாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது இவ்வாறான அழிவிலிருந்து இளைய தலைமுறையினரையும் மாணவர்களையும் பாதுகாத்து மீட்டெடுப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என தெரிவித்தார்.











