வரவிருக்கும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2029 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சரவையில் 12 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
தற்போது பிரதமருடன் சேர்த்து 69 அமைச்சர்கள் உள்ள நிலையில், அரசியல் சாசனப் விதிமுறைகளின்படி அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கையை 81 வரை உயர்த்த முடியும் என்பதால், காலியாக உள்ள 12 இடங்களை நிரப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கவும் இந்த மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது.
அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூடுதல் துறைகளைக் கவனித்து வரும் நிலையில், அவற்றைப் புதிய அமைச்சர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், மகாராஷ்டிராவின் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி தோழமைகளுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளையில், பா.ஜ.க-வின் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கோட்பாட்டின்படி கட்சிப் பணிகளில் பொறுப்பேற்றுள்ள தலைவர்கள் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் பதவி மே மாதத்துடன் நிறைவடையும் உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.











