திபெத் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இமாலய மலையுச்சியில் ஏற்பட்ட திடீர் பனி மற்றும் பாறைச் சரிவு காரணமாக எல்ஹெண்டே ஆற்றின் நீரோட்டம் தடைபட்டு, பின்னர் அது உடைப்பெடுத்து பிரம்மாண்ட வெள்ளமாக மாறியிருக்கலாம் என அறிவியலாளர்கள் கணிக்கின்றனர்.
இந்த வெள்ள நீர் காலை 9 மணி அளவில் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் சீறிப் பாய்ந்து டிமுரே, சியாப்ரு பெசி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை முழுமையாக அடித்துச் சென்றது.
வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன் அப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு மழை பொழியாததால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அவகாசம் கிடைக்காமல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேரழிவால் ரசுவா, நுவாகோட், தாடிங், சித்வான் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பாலங்கள், சாலைகள் மற்றும் நீர்மின் நிலைய உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
சுமார் 85 பாதுகாப்புப் படை வீரர்கள், நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் மின் திட்டப் பணியாளர்கள் இதுவரை தொடர்பில் வரவில்லை என்பதால் அவர்களைத் தேடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு நேபாள பிரதமர் பாலன் ஷா அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி நிவாரண பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
நேபாள ராணுவம், ஆயுதக் காவல் படை மற்றும் காவல்துறையினர் களமிறக்கப்பட்டு, ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்பு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.











