மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர் ஒருவரிடம் டிக்கெட் பரிசோதகர் முறைகேடாக ரூ.7,000 வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே வகாடி பேருந்து நிலையத்திலிருந்து கத்ராஜ் பகுதிக்குச் சென்ற பேருந்தில் பயணித்த அம்மாணவரிடம் பரிசோதகர் டிக்கெட் கேட்டுள்ளார்.
அதற்கு அம்மாணவர், ஆன்லைன் மூலமாகத் தனது செல்போனில் கட்டணம் செலுத்த முயன்றும் தொழில்நுட்பக் கோளாறால் பணப் பரிவர்த்தனை தோல்வியடைந்ததற்கான ஆதாரங்களைக் காண்பித்துள்ளார்.
இருப்பினும், அதை ஏற்க மறுத்த பரிசோதகர், டிக்கெட் இல்லாமல் பயணித்ததாகக் கூறி ஆரம்பத்தில் ரூ.13,000 அபராதம் கேட்டு மிரட்டியுள்ளார்.
பின்னர் பேரம் பேசித் தொகையை ரூ.10,000 ஆகக் குறைத்து, இறுதியாக ரூ.7,000-ஐ மாணவரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துள்ளார்.
வழக்கமாக பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு ரூ.500 மட்டுமே அபராதமாக விதிக்கப்பட வேண்டிய நிலையில், இந்தத் தொகையைப் போக்குவரத்து நிர்வாகக் கணக்கிற்கு அனுப்பாமல் தனது சொந்த வங்கிக் கணக்கிற்குப் பரிமாற்றம் செய்ய வைத்துள்ளார்.
அத்துடன், மாணவரே விருப்பப்பட்டு இந்தத் தொகையைச் செலுத்துவதாக ரசீதில் எழுத வைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என புனே மாநகரப் போக்குவரத்துக் கழகம் (PMPML) தெரிவித்துள்ளது.
பயணிகளிடம் அபராதம் வசூலிப்பதற்கான உரிய நடைமுறைகளை ஊழியர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், விதிகளை மீறி அதிகத் தொகை வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.











