தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவது குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது.
ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி பேசுகையில், “பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளையும் கவலைகளையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டது போல, ஓசூர் விவசாயிகளின் குரலையும் கேட்க வேண்டும்.
ஓசூரில் ஏற்கனவே இயங்கி வரும் தனியார் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், விளைநிலங்களை அழித்து புதிய திட்டம் கொண்டுவரக் கூடாது” எனக் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் தொழிற்துறை விரிவாக்கத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
“எந்தவொரு பெரிய மாநில வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு வர வேண்டுமானாலும் விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. பக்கத்து மாநிலமான கர்நாடகாவை விடத் தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக ஓசூர் பகுதிக்கு அதிக முதலீடுகளும் புதிய திட்டங்களும் வர வேண்டும் என்ற நோக்கில் தான் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் அவசியம் என்பதால், அரசு தனது திட்டமிட்ட நடவடிக்கைகளுடன் தொடர்ந்து முன்னேறும் என்பதை அமைச்சரின் பதில் உணர்த்துகிறது.











