மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கிடையேயான ராணுவ மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஈரானின் மிக முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகே நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நான்கு ஏவுகணைகளை வீசி அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது.
கார்க் தீவில் இருந்து சுமார் ஆறு கடல் மைல் தொலைவில் நடந்த இத்தாக்குதலில் கப்பல் பலத்த சேதமடைந்தபோதிலும், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கார்க் தீவு அருகே அமைந்த ‘எம்/டி டவுனி’, ஜாஸ்க் பகுதி அருகே இருந்த ‘எம்/டி ஸ்டார்க் 1’ மற்றும் ஓமன் வளைகுடாவில் பயணித்த மற்றொரு கப்பல் என மொத்தம் மூன்று ஈரானிய எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றைச் செயலிழக்கச் செய்துள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதப் பங்களிப்பைக் கொண்ட கார்க் தீவுப் பகுதி மற்றும் முக்கியக் கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஒட்டி இத்தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகமும் விலையும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கும் என அறிவித்துள்ளதால் வளைகுடாப் பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்து பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.











