யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புக்கான கோரிக்கை அதிகமாக இருந்தாலும், தொழில் வழங்குநர்கள் எதிர்பார்க்கும் வகையில் பணிக்கு தொடர்ச்சியாக வருதல், பொறுப்புடன் பணியாற்றுதல் மற்றும் தொழில்திறனை மேம்படுத்திக் கொள்ளுதல் போன்ற விடயங்களில் சில குறைபாடுகள் காணப்படுவதனால், வெளிமாவட்டங்களில் இருந்து பணியாளர்களை அழைத்து நிலைமைகள் காணப்படுவதாக மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இதன்படி மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் இணைந்து நடாத்தும் விசேட தொழிற் சந்தை எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக பங்குதாரர்களுடனான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலக செயலமர்வு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட செயலர்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் தேடுவோருக்கும் தொழில் வழங்குநர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்கில் எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் தொழில் சந்தை நடைபெறவுள்ளது.
தற்போதைய தரவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2,261 பேர் இவ்வாண்டு வேலைவாய்ப்பற்றவர்களாகப் பதிவாகியுள்ள போதிலும், இந்தத் தரவுகள் வேலையற்றோரின் முழுமையான எண்ணிக்கையாக இருக்க முடியாது.
தொழிற்சந்தைக்காக வேலைதேடுவோரின் தற்போதைய தகவல்களைப் பெறுவதற்காக மாவட்ட செயலகத்தின் இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக Google Form அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 570 பேர் அதில் பதிவு செய்துள்ளனர்.
மேலும், யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புக்கான கோரிக்கை அதிகமாக இருந்தாலும், தொழில் வழங்குநர்கள் எதிர்பார்க்கும் வகையில் பணிக்கு தொடர்ச்சியாக வருதல், பொறுப்புடன் பணியாற்றுதல் மற்றும் தொழில்திறனை மேம்படுத்திக் கொள்ளுதல் போன்ற விடயங்களில் சில குறைபாடுகள் காணப்படுகிறது.
இதன் காரணமாக சில நிறுவனங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து பணியாளர்களை அழைத்து வந்து தங்குமிட வசதிகளுடன் பணியில் அமர்த்தும் நிலை காணப்படுகிறது.
அதேவேளை, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ்ப்பாண மாவட்டம் தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் தொழில்திறன் மற்றும் பணியாற்றும் ஆர்வத்தை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு தொடர்பான இடைவெளியை குறைக்க முடியும்.
தொழில் தேடுவோர் மற்றும் தொழில் வழங்குநர்கள் இருதரப்பினரையும் ஒரே தளத்தில் இணைத்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இத்தொழில் சந்தையின் பிரதான நோக்கமாகும்.
மேலும், நிறுவனங்களின் அபிப்பிராயங்கள் கேட்டறிந்து சிறப்பாக தொழில் சந்தையினை நடாத்துவதற்கும் யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு அதிகவாய்ப்பானதாக அமைய அனைவரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் 30 இற்கு மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவன பிரதிநிதிகள், மேலதிக செயலர் கே. சிவகரன், மனித வள அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் க.கருணாகரன், மாவட்ட மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழிற்சந்தை நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள பங்குதாரர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.











