மட்டக்களப்பு, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்கு பங்கம் விளைவித்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மங்களாராமய விகாரையின் விகாராதிகாரி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொடர்ந்து 11ம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (8) உத்தரவிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி மட்டக்களப்பு சென்றல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்குள்ள அரசு ஊழியர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட அரச அதிகாரிகளால் மட்டக்ககளப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இது குறித்து வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு சம்பவ தினமான திங்கட்கிழமை (7) சென்றிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர். மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான பொலிஸசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை இன்று செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த பட்டபோது வழக்கை விசாரணைக்கு நீதவான் எடுத்து கொண்ட போது பொலிசார் குறித்த தேரருடன் 5 பேர் சென்று அரச அதிகாரிகளுக்கு இடையூறு விளைத்ததாகவும் அவர்கள் தலைமறைவாகி உள்ளதாகவும் சந்தேகநபர்களை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என பொலிசார் நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்தனர்.
இதையடுத்து நீதவான் தேரரை எதிர்வரும் 11 திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.











