பிரித்தானியாவில் ஏற்பட்ட கணினிச் செயலிழப்பினால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்நாட்டின் ‘NATS’ விமானக் கட்டுப்பாட்டு சேவை நிறுவனத்திற்குப் பிரித்தானிய அரசு உத்தரவிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரண்டு நாட்களில் சுமார் 2,000 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டன.
இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், விமான நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து விளக்குமாறு NATS நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின் ரோல்ஃபை (Martin Rolfe) போக்குவரத்து அமைச்சர் ஹெய்டி அலெக்சாண்டர் (Heidi Alexander) நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த முடக்கம் இணையத் தாக்குதலால் (cyberattack) ஏற்படவில்லை என்றும், இவ்வாறான தவறைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் (CAA) சார்பில் இது குறித்து தனியான, சுயேச்சையான விசாரணை நடத்தப்பட்டு, அடுத்த ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் NATS நிறுவனத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய செயலிழப்பு இதுவாகும்.
2023 ஆகஸ்ட் மாதத்திலும் ஏற்பட்ட இதேபோன்ற கோளாறினால் விமான நிறுவனங்களுக்கு சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டது.
தொடர்ச்சியான இத்தவறுகளுக்குப் பொறுப்பேற்று NATS நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்ட்டின் ரோல்ஃப் உடனடியாகப் பதவிய விலக வேண்டும் என ரயானேர் (Ryanair) விமானச் சேவையின் தலைமை நிர்வாகி மைக்கேல் ஓ’லியரி வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் தங்களுக்கு 3 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயானேர் தெரிவித்துள்ளது.
அதேவேளை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை 100 விமானங்களையும், புதன்கிழமை 190 விமானங்களையும் ரத்து செய்தது.
விமானங்களும் ஊழியர்களும் வேறு இடங்களில் முடங்கியுள்ளதால், விமானச் சேவைகள் இயல்புநிலைக்குத் திரும்ப மேலும் சில நாட்கள் ஆகலாம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் விமான நிலையங்களுக்குப் புறப்படுவதற்கு முன்னர் தமது விமானச் சேவைகளை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.











