ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன் இந்த வார தொடக்கத்தில் தான் ஒரு “சிறந்த” உரையாடலை மேற்கொண்டதாகவும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் செய்ய ரஷிய தலைவர் விரும்புவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
குடியரசுத் கட்சியின் தேசிய மாநாட்டிற்காக டல்லாஸ் செல்ல ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ரஷிய அதிபர் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார், மேலும் உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் ஒரு ஒப்பந்தத்தை விரும்பினால், அது மிகவும் நன்றாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோ மற்றும் கிய்வ் ஆகிய இடங்களுக்கான இராஜதந்திரப் பயணத்தை முடித்துத் திரும்பிய சிறிது நேரத்திலேயே, செவ்வாய்க்கிழமை டிரம்ப் புடினுடன் தொலைபேசியில் பேசினார்.
அமெரிக்க சார்பில் பெரும்பாலான முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பொறுப்பேற்றுள்ள இவர்கள் இருவரும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியமான திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
கடந்த மாதம், ரஷியாவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவர அந்நாட்டு அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் மாஸ்கோவில் உக்ரைனிய மற்றும் ரஷிய புலனாய்வு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.
இருப்பினும், நான்காவது ஆண்டாக நீடிக்கும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர புடின் தீவிர ஆர்வம் காட்டுகிறார் என்பதை அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சந்தேகிக்கின்றனர்.
புடின் மற்றும் ஜெலென்ஸ்கியைக் குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், “மற்ற எதையும் விட, இது ஒருவரையொருவர் வெறுக்கும் இரண்டு மனிதர்களின் பிரச்சினை என்றே நான் நினைக்கிறேன்” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.











