UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணத்தை அமுல்படுத்துவது அமெரிக்க நிறுவனங்களுக்கு பயன் அளிப்பதற்காகவே என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை இந்திய மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவின் கொள்கை முடிவுகள் முற்றிலும் சுயாதீனமாகவே எடுக்கப்படுவதாக அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
UPI மற்றும் RuPay தளங்களின் வளர்ச்சியால் அமெரிக்க நிறுவனங்கள் சந்தையில் பின்னடைவைச் சந்தித்ததாகவும், அவற்றை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அமெரிக்க அழுத்தத்திற்கு அரசு பணிந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
இதற்குப் பதிலளித்துள்ள நிதி அமைச்சகம், “UPI தொடர்பான முடிவுகள் அனைத்தும் நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித வெளிநாட்டு தலையீடும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, தனிநபர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கும், கடைகளில் QR கோட் மூலம் செய்யப்படும் சாதாரண பரிவர்த்தனைகளுக்கும் எவ்வித கட்டணமும் விதிக்கப்படாது. அவை வழக்கம்போல் இலவசமாகவே தொடரும்.
அக்டோபர் 15 முதல், ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்படும்.
ஒரு மாதத்திற்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக UPI மூலம் பணம் பெறும் வணிகர்கள் மட்டுமே இந்த வரம்பிற்குள் வருவர்.
இந்தக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 95 சதவீதத்திற்கும் அதிகமான வணிகப் பரிவர்த்தனைகள் ரூ.2,000-க்கு குறைவாகவே இருப்பதால், சாதாரண கடைக்காரர்களோ அல்லது நுகர்வோரோ இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த MDR கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தக்கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணம் அரசுக்கோ அல்லது NPCI நிறுவனத்திற்கோ செல்லும் வரி அல்ல என்றும், UPI கட்டமைப்பு, தொழில்நுட்ப பராமரிப்பு மற்றும் வங்கிகளின் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டவே பயன்படும் என்றும் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.











