கனடா அரசு அறிமுகப்படுத்திய Bill C-34 (Safe Social Media Act) மசோதா, சமூக ஊடகங்கள் மற்றும் AI சாட்பாட்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டிருந்தாலும், இது எதிர்காலத்தில் அரசுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளுக்கு வழிவகுக்கலாம் என்று சட்ட மற்றும் தனியுரிமை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன்படி தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் விதிகள் மிகவும் பரந்ததாக இருப்பதால், சட்டபூர்வமான கருத்துக்களும் தடுக்கப்படக்கூடும் என்ற அச்சம் உள்ளது.
16 வயதிற்குக் குறைந்தவர்களை சமூக ஊடகங்களில் இருந்து தடுக்க வயது சரிபார்ப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதற்காக பயனர்கள் கூடுதல் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டிய நிலை உருவாகலாம்.
அரசுக்கும் புதிய கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும் அதிக அதிகாரம்: மசோதாவின் பல முக்கிய அம்சங்கள் பின்னர் விதிமுறைகள் மூலம் தீர்மானிக்கப்படவுள்ளதால், நாடாளுமன்ற கண்காணிப்பு குறைகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். சுமார் 50 முக்கிய முடிவுகள் எதிர்கால ஒழுங்குமுறைகளுக்கு விடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த சேவைகள் இந்தச் சட்டத்தின் கீழ் வருமெனவும், வயது சரிபார்ப்பு எவ்வாறு செயல்படும் எனவும் பல விடயங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதனால் சட்ட சவால்கள் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இணையதள தீங்குகளிலிருந்து பாதுகாக்கவும், சமூக ஊடகங்கள் மற்றும் AI சேவைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கவும் இந்த மசோதா அவசியம் என்று கனடா அரசு கூறுகிறது. இதற்காக புதிய Digital Safety Commission of Canada அமைப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
Bill C-34 ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வந்தாலும், கருத்துரிமை, தனியுரிமை மற்றும் அரசின் அதிகார வரம்புகள் தொடர்பாக நீதிமன்றத்தில் சவாலுக்கு உள்ளாகும் அம்சங்கள் இதில் உள்ளன என்று சட்ட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.











