உலகின் அதிநவீன ஆறாம் தலைமுறை (Sixth-Generation) அதிநவீன போர் விமானங்களை வடிவமைத்து தயாரிக்கும் நோக்கில், பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி முதலான நாடுகள் முன்னெடுத்துள்ள பில்லியன் டொலர் மதிப்பிலான ‘சர்வதேச கூட்டுப் போர் வான்வழித் திட்டத்தில்’ கனடா அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளது.
தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி (David McGuinty) அடுத்த வாரம் ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இத்திட்டத்தில் கனடா ‘அதிகாரப்பூர்வ கண்காணிப்பாளர்’ (Official Observer) நாடாக இணைவதை, உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனத் தெரியவந்துள்ளது.
லண்டனில் நடைபெறவுள்ள விசேட கையெழுத்து விழாவில், பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் இணைந்து, தேசிய பாதுகாப்பு அமைச்சர் மெக்கின்டி இந்த உடன்படிக்கையை அங்கீகரிக்கவுள்ளார்.
இந்த ‘சர்வதேச கூட்டுப் போர் வான்வழித் திட்டத்தில்’ இணைவதன் மூலம், கனடா உடனடியாக எந்தவொரு நிதி முதலீடுகளையோ அல்லது கொள்கை ரீதியான கடப்பாடுகளையோ ஏற்க வேண்டியதில்லை என்ற நிலை காணப்படுகின்றது.
எனினும், ஒரு கண்காணிப்பாளர் நாடாக நுழைவதன் மூலம் ஆரம்பக் கட்டத்திலேயே அதிநவீன வான் பாதுகாப்புத் தொழில்நுட்ப வளர்ச்சிகளை உற்றுநோக்கவும், எதிர்காலத்தில் கனேடிய தொழில்நுட்பங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் இது ஒரு அரிய வாய்ப்பாக அமையுமென கனேடிய உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கனடா எங்கு இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்துச் செயல்படுவதற்கு இதுவொரு மிகச்சிறந்த உத்தியோகபூர்வ நகர்வாகும் என, கனேடிய வான் பாதுகாப்பு பிரிவின் (NORAD) முன்னாள் தளபதி கிறிஸ்டோபர் கோட்ஸ் (Christopher Coates) தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.











