“அல்பேர்ட்டா நாட்டை விட்டு விலகக் கூடாது, மாறாக நாட்டை வழிநடத்த வேண்டும்” (Lead, not leave) என்று கனேடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அல்பேர்ட்டா மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அல்பேர்ட்டா (Alberta) மாகாணம், நாட்டில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் எதிர்கொள்ளவுள்ள நிலையில், பிரதமரின் இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.
அல்பேர்ட்டாவின் புகழ்பெற்ற வருடாந்த ‘கால்கரி ஸ்டாம்பீட்’ (Calgary Stampede) திருவிழாவின் இறுதி வார இறுதியில் பிரதமர் மார்க் கார்னி கலந்துகொண்டு தீவிர அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அல்பேர்ட்டா மாகாண மக்களைக் கூட்டமைப்பிற்குள் தக்கவைக்கும் நோக்கில் பிரதமர் கார்னி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
திருவிழா மைதானத்தில் மக்களைச் சந்தித்த பிரதமர் கார்னி, அங்கிருந்தவர்களுடன் கைகுலுக்கியும், ‘பான்கேக்’ (Pancake) சமைத்துப் பரிமாறியும் வழமையான அரசியல் பாணியில் உரையாடினார்.
“உலகம் பல சவால்களை எதிர்கொள்ளும் இந்த வேளையில், கனடாவை உலக அரங்கில் வழிநடத்தும் ஆற்றல் அல்பேர்ட்டாவிற்கு உள்ளது. எனவே, நாட்டை உடைக்காமல் (Build not break), நாட்டை விட்டு விலகாமல் வழிநடத்துங்கள் (Lead not leave)” என, பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தினார்.
இதேவேளை, அல்பேர்ட்டாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவ்ரேவும் (Pierre Poilievre) கடந்த வாரம் கால்கரிக்கு விஜயம் செய்து பிரிவினைவாதத்திற்கு எதிராகப் பிரசாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த காலங்களில் மத்திய அரசு தங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியதாக அல்பேர்ட்டா மக்கள் கொண்டுள்ள அதிருப்தியைப் போக்குவதற்கு, பிரதமர் கார்னி புதிய உத்திகளைக் கையாண்டு வருகிறார்.
இதன் ஒரு கட்டமாக, அல்பேர்ட்டா பிரீமியர் டேனியல் ஸ்மித்துடன் இணைந்து, மேற்கு கடற்கரை நோக்கிச் செல்லும் புதிய கச்சா எண்ணெய் குழாய்த்திட்டத்தை (Oil Pipeline) நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக. பிரதமர் கார்னி தமது உரையில் சுட்டிக்காட்டியமை
குறிப்பிடத்தக்கது.











