இந்திய மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் பணியாளர்களுக்குக் பிடிக்கப்படும் EPF கட்டாய ஊதிய உச்சவரம்பை ரூ.15,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவையின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு இது அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வரவுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 1, 2027 முதல் நடைமுறைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்த EPF ஊதிய வரம்பு ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வரம்பை ரூ.30,000 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்ட நிலையில், இறுதியாக ரூ.25,000 ஆக நிர்ணயித்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.15,000 வரை இருந்தால் மட்டுமே EPF பிடித்தல் செய்வது கட்டாயமாக இருந்தது.
இனி புதிய வரம்பின் மூலம், மாத அடிப்படைச் சம்பளம் ரூ.25,000 வரை பெறும் தனியார் துறை ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக EPF மற்றும் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) இணைக்கப்படுவர். இதன் மூலம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் பெறும் லட்சக்கணக்கான தனியார் துறை ஊழியர்கள் புதிதாகச் சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள்.
ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கிற்கு (EPS) நிறுவனங்கள் அளிக்கும் 8.33% பங்களிப்புடன், மத்திய அரசும் 1.16% நிதியை வழங்கி வருகிறது. இந்த ஊதிய வரம்பு உயர்த்தப்படுவதால் மத்திய அரசுக்கான நிதிச்சுமையும் அதிகரிக்கும். 2026-27 நிதியாண்டில் ஓய்வூதியத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.11,144 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கட்டாயமாக EPF திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். 20-க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் EPFO தளத்தில் பதிவு செய்து ஊழியர்களை இணைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











