க்ளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக, க்ளீன் ஐலண்ட் (Clean Island) திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூய்மையான தீவுகள் (Clean Island) அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வலுசக்தி அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) திரு.ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பொறியாளர் எஸ்.பி.சி. சுகேஸ்வர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
ஜனாதிபதி அவர்களின் கீழ் செயற்படும் க்ளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக, க்ளீன் ஐலண்ட் (Clean Island) திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் ஊடாக இத்தீவுகளை தூய்மையானதாகவும், பசுமையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள தூய்மையான தீவுகள் (Clean Island) அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயற்பாட்டு நோக்கங்கள் தொடர்பில் வலுசக்தி அமைச்சின் செயலாளர் திரு. ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு அவர்கள் விரிவான விளக்கங்களை வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவான கருத்தாடல்கள் இடம்பெற்றன.
தீவுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைமயமாக்கல் மற்றும் நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில், மாவட்ட செயலர் ம.பிரதீபன், மேலதிக செயலர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச சபைகளின் செயலாளர்கள், நெடுந்தீவு, வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர் , சமூக அபிவிருத்தி சபைத் தலைவர்கள், கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.











