பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ்பெற்ற அரசுப் பொது மருத்துவமனையான ‘பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தின்’ (PIMS) மூன்றாவது மாடியில் அமைந்துள்ள மகப்பேறு பிரிவில் இன்று (புதன்கிழமை) காலை 7 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அங்கு சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த ஏ.சி (AC) கம்ப்ரசர் அதிக வெப்பம் காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததே இந்த எதிர்பாராத விபத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது எனத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்ப்ரசர் வெடித்த சில நொடிகளிலேயே தீ மகப்பேறு பிரிவின் நர்சரி வார்டு( Nursery Ward) முழுவதும் பரவியது.
அடர்ந்த புகையும் கொழுந்துவிட்டு எரிந்த தீயும் வார்டு முழுவதையும் சூழ்ந்ததால், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) வைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைகள் அலறின.
இந்த கோர விபத்தில் புகையால் மூச்சுத்திணறியும், தீக்காயங்களாலும் 15 பச்சிளம் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
நர்சரியில் இருந்த 16 குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் மீட்புக் குழுவினரால் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தி பல மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த துயர சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த கூடுதல் துணை ஆணையர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் தீயணைப்பு சாதனங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டதா என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.











