நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, முக்கிய விளைச்சல் மாநிலங்களில் வெங்காய உற்பத்தி வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.
இதன் காரணமாகச் சந்தைகளுக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்து, நாடு முழுவதும் அதன் சில்லறை விற்பனை விலை சுமார் 59 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
குறிப்பாகத் தமிழகத் தலைநகர் சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளதால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கடுமையான விலை உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் தடையின்றி வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
முதற்கட்டமாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்புச் சரக்கு ரயில் மூலம் 400 டன் வெங்காயம் தலைநகர் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறைச் செயலாளர் நிதி காரே இந்த விநியோகப் பணியைத் தொடங்கி வைத்தார்.
இந்த வெங்காயம், NCCF மற்றும் NAFED ஆகிய கூட்டுறவு அமைப்புகளின் நடமாடும் வாகனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் ஒரு கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் பொதுமக்களுக்கு நேரடி விற்பனை செய்யப்படவுள்ளது.
தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து விரைவில் சென்னை, மதுரை, எர்ணாகுளம் மற்றும் கவுகாத்தி ஆகிய முக்கிய நகரங்களுக்கும் ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ ரயில்கள் மூலம் மலிவு விலை வெங்காயம் கொண்டு வரப்பட உள்ளது.
இதனால் தமிழகத்திலும் விரைவில் வெங்காய விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.











