பொதி செய்யப்பட்ட உணவுகளின் முன்பக்கத்தில் எச்சரிக்கை அடையாளங்களை (health labels) அச்சிடும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, இந்திய உணவு உற்பத்தியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த எச்சரிக்கை அடையாளங்கள், உலகளவில் இந்திய உணவின் உருவப்படத்திற்கு (image) களங்கம் விளைவிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசு அறிவித்த லேபிளிங் திட்டத்திற்கு எதிராக, 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய பாக்கெட் உணவுத் துறையிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ள முதல் சட்டப்பூர்வ எதிர்ப்பு இதுவாகும்.
மேலதிக சர்க்கரை, உப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்பு ஆகிய மூன்றில் குறைந்தபட்சம் இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ள தயாரிப்புகளுக்கு, சிவப்பு நிற அறுகோண வடிவ லேபிளைப் பயன்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்மொழிந்துள்ளது.
திடமான உணவுப் பொருட்களின் எடையில் கூடுதல் சர்க்கரை 3%க்கு மேலாகவும், கொழுப்பு 4.2%க்கு மேலாகவும் இருந்தால் இத்தகைய எச்சரிக்கை அடையாளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவு, பல வெளிநாட்டுச் சந்தைகளை விடவும் மிகவும் கடுமையானது என உணவுத் துறை நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த வரம்புகள் குறித்து மேலும் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்திய நுகர்வோரின் நுகர்வு முறைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து இந்திய உணவு பதப்படுத்துவோர் சங்கம் (AIFPA) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இந்த அணுகுமுறையினால், சுமார் 80% பாக்கெட் உணவுப் பொருட்கள் அதிக கொழுப்பு, சர்க்கரை அல்லது உப்பு கொண்ட பிரிவின்கீழ் வரக்கூடும் என ஒழுங்குமுறை ஆணையத்திடம் முன்னரே சமர்ப்பித்திருந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டி AIFPA இதனை வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஒரு தயாரிப்புக்கு எச்சரிக்கை அடையாளம் தேவையா என்பதை முடிவு செய்ய, ஒருமுறை உண்ணும் அளவைக் (single serve) கணக்கில் கொள்ளாமல், 100 கிராம் என்ற அளவுகோலைப் பயன்படுத்துவதே முக்கியச் சிக்கல் என உணவுத்துறை நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்காவைப் போல ஒருமுறை உண்ணும் அளவின் அடிப்படையில் கணக்கிடும் அணுகுமுறையைப் பின்பற்றுமாறு AIFPA கோரியுள்ளது.
சுகாதார ஆர்வலர்களின் மனுக்களை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இத்திட்டம் குறித்து ஆய்வு செய்யவுள்ளது.











