“இந்து சகோதரர்களின் சமர் “எனும் தொனிப்பொருளில் மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நாளைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனை அடுத்து நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் ஊடக அமையத்தில் துடுப்பாட்ட சமர் குறித்து ஊடகங்களுக்கு அறிமுக சந்திப்பினை நடாத்தி இருந்தனர்.
குறித்த ஊடக சந்திப்பின் போது, சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர் சர்வேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,மானிப்பாய் இந்து கல்லூரி மற்றும் எமது சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியன பெரும் சமர் ஒன்றினை ஆரம்பிக்கின்றோம். இந்து சகோதரர்களுக்கிடையிலான சமர் என்ற பெயருடன் (battle of Hindu brother ) இடம்பெறும்.
இரு கல்லூரிகளுக்கிடையிலான துடுப்பாட்ட மோதல் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு முதல் தடவையாக இடம்பெறுகின்றது. மானிப்பாய் இந்து கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியன யாழ் இந்துக் கல்லூரி சபையின் கீழ் இயங்கிய பாடசாலைகள், அந்த வகையில் நாம் இருவரும் சகோதர பாடசாலைகள் சகோதர பாடசாலைகள் என்பதால் நாம் இந்து சகோதரர்களின் சமர் என்ற பெயரினை சூடியுள்ளோம்.
இது ஒரு தொடர்ச்சியான விடயமாக இருக்க போகின்றது என தெரிவித்தார். தொடர்ந்து மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர் இளங்கோ தெரிவிக்கையில்,
இந்த துடுப்பாட்டச் சமரினை வெற்றிகரமாக இவ்வருடத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளோம். இந்து சகோதரர்களின் சமர் என்று வர்ணிக்கப்படுகின்ற இந்தப் போட்டி இரண்டு நண்பர்களையும் இணைத்து நிற்கின்றது.
எமது பாடசாலை கிரிக்கெட், உதைப்பந்தாட்டம் என்பவற்றில் பெயர் பெற்று விளங்கியது. அது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கொவிட் காலத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் தற்பொழுது முன்னேற்றம் உள்ளது. எமது மாணவர்களின் கிரிக்கெட் திறனை வளர்க்கும் முகமாக இந்த சமரினை நாங்கள் ஆரம்பித்துள்ளோம் என தெரிவித்தார்.











