களுத்துறை மக்கொனபிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய காதலனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனது காதலியைக் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காதலனை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (31) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காதலன் கடந்த செவ்வாய்க்கிழமை (29) பிற்பகல் கொலை செய்யப்பட்ட காதலியுடன் பயாகலை, தியலகொட பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் கோபமடைந்த காதலன் தனது காதலியைக் கல்லால் தாக்கியுள்ளார். காயமடைந்த காதலி களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
களுத்துறை, பயாகலை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய காதலியே கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேக நபரான காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.











