வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படுகிறது
தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக வீதிக்கு அருகில் உள்ள இடத்தில் புதையல் தேடும் அகழ்வு பணிகள் இடம்பெறுவதுடன் , இன்று மூன்றாவது நாளாகவும் குறித்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெயாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கடந்த காலங்களில் பல்வேறு நபர்கள் புதையல் தேடும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் இதே இடத்தில் அகழ்வுகள் மேற்கொண்ட நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தற்போது புதையல் தோண்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அத்தனகல்ல நீதவான் வழங்கிய உத்தரவுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையின் போது பூமிக்குள் ஏதோ ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம், பொதுமக்கள் முன்னிலையில் குறித்த இடத்தில் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு வெயாங்கொடை பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.
அகழ்வாராய்ச்சிக்கு இரண்டு நாள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அதன்படி நேற்றும், நேற்றைய முதல் நாளும் புதையல் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் நேற்று பிற்பகல் வரையிலும் அதனை நிறைவு செய்ய முடியாத நிலையில், பாரிய கல் ஒன்று கிடைத்ததையடுத்து நேற்றைய அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மக்கள் அனைவரும் இந்த இடத்தில என்ன புதையல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதும் அவதானிக்கத்தக்கது.











