மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் அதிகமானோர் ஈடுபடுவதனால் வயல் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே தற்காலிகமாக குறித்த பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைருமான அருண் ஹேமசந்திர தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் ஜஸ்டினா முரளிதரன் ஒருங்கிணைப்பில் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (2) அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை (02) இடம்பெற்றது. இதில் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முஹம்மட் சாலி நளீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்திகுழு தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு பல்வேறுபட்ட விடயங்கள் பேசப்பட்டன. அதற்கு ஆக்கபூர்வமான பதில்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த அனர்த்தம் தொடர்பாக சகல இடங்களில் இன்னும் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டிருக்கலாம் என்ற பல்வேறுபட்ட விமர்சனங்கள் இடம்பெற்றிருந்தாலும் ஆக்கபூர்வமாக செயற்பட்ட அதிகாரிகளுக்கு நன்றிகள்.
இனிவரும் காலத்தில் இன்னும் எங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. அதனை உணர்ந்து செய்ய வேண்டிய கடமை இருக்கின்றது. இருந்தபோதும் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்த முறைசாராத அபிவிருத்திகள் இந்த அனர்த்ததிற்கு ஒரு முக்கியமான காரணியாகும்.
எனவே இது தொடர்பாக நிரந்தரமான தீர்வை நோக்கி போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இனிவரும் காலங்களில் அபிவிருத்தியானது மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தியாக இருக்க வேண்டுமே தவிர அபிவிருத்தி பணிகள் எந்தவகையிலும் அன்றாட வாழ்க்கைக்கு பாதகங்களை ஏற்படுத்தகூடிய அபிவிருத்தியாக இருக்கமுடியாது.
ஆகவே அபிவிருத்தி அன்றாட வாழ்கைக்கு பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. என்றால் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளோம். அதுமாத்திரம் அல்ல இங்கு சட்டவிரோதத்திற்கும் விதிமுறைக்கும் அப்பாற்பட்டு மணல் அகழ்வு தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுக்க கோரியிருந்தாலும் சில அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனமும் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே உயர் அதிகாரிகளை கொண்டு தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்வரும் காலங்களிலும் விதிமுறைக்கு முரணாக மண் அகழ்வுகள் இடம்பெறுமாயின் இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்குமாறு கேட்டுள்ளோம்.
இந்த அனர்த்தங்கள் மூலமாக கூட சரியான பாடங்களை கற்றுக் கொள்ளாவிட்டால் இது ஒரு பரவலான பாதிப்புக்கு வழியமைக்கும் என்பதில் மாற்றுகருத்து இல்லை எனவே இந்த விடயம் தொடர்பாக பொறுப்பு கூறவேண்டிய அதிகாரிகள் இன்னும் பொறுப்புடன் செயற்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
வைத்தியசாலைகள், அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நஷ்டஈடுகள், விவசாய நிலங்கள் தொடர்பான சரியான மதிப்பீடுகள் உட்பட பல்வேறு தரப்பட்ட விடயங்கள் இந்த குழுகூட்டத்தில் கலந்துரையாடி தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் தீர்வுகள் எட்டப்படாத விடயங்கள் தொடர்பாக அமைச்சு மட்டத்தில் தீர்வுகளை எட்டுவதற்காக எமது தலையீடு இருக்கும். என்பதில் ஐயமில்லை
1978 அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13 திருத்தச்சட்டம் தொடர்பாக ரில்வின் சில்லா தெரிவித்தார். அதாவது இந்த அரசியல் அமைப்பை மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. மாகாணமுறமையை நீக்குவதற்கான எந்த மக்கள் ஆணையை பெறவில்லை இதனை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். அவர் அதில் குறிப்பிட்ட விடயம் இந்த மாகாணசபை அலகு போதியதல்ல எனவே இதனையும் ஒரு தீர்வை நோக்கி போகவேண்டும்
அது மாத்திரமல்ல புதிய அரசியல் யாப்பை முன்வைக்கும் போது 13 திருத்தச்சட்டம் அல்ல முதலாவது சீர்திருத்தம் தொடக்கம் 20 வரையிலான சீர்திருத்தம் மாற்றப்பட்டு ஒரு புதிய அரசியல் அமைப்பு முன்வைக்கப்படவுள்ளது. ஆகவே இந்த விடயம் பிழையாக புரிந்துகொள்ளப்பட்ட விடயமாக நாங்கள் பார்கின்றோம். ஆகவே எந்தவொரு வகையிலும் தேசிய மக்கள் சக்தியால் மாகாணசபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணையை பெறவில்லை அதற்கான முயற்சில் ஈடுபடவில்லை.
ஆனால் மாகாண சபையையும் விட ஒரு சபை வலியுறுத்திய அனைத்து மக்களுக்கும் சமனான அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள கூடிய அரசியல் அமைப்பு தேவை அதில் மாகாணசபை இருக்கா இல்லையா என்ற விடயம் எனவே இதுவரையும் மாகாணசபையை நீக்குவதற்கான எந்தவிதமான முன்மொழிவுகளை முன்வைக்கவில்லை என்றார்.
இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி), மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், ஆணையாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், மீன் பிடி, விவசாய திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.











