மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்பு பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் ‘உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்’ சஞ்சிகை வெளியீடும், பெண்களுக்கான ஒரு நாள் இலவச பஸ் சேவை ஆரம்பித்து வைப்பும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் எனும் தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை (10) மட்டு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.
அருவி பெண்கள் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த இறுதி நாள் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஐஸ்டினா முரளிதரன், மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.லலித் லீலாரட்ன, பிரதேச செயலாளர்களான வீ.வாசுதேவன், சிவப்பிரியா வில்வரத்தினம். இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் கந்தசாமி சிறிதரன், கலந்துகொண்டு ‘உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்’ எனும் சஞ்சிகை வெளியிட்டு வைத்தனர்.
இதனை தொடர்ந்து பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட சவால்களுக்கான பரிந்துரைகள் அடங்கிய மகஜர் ஒன்றை அரசாங்க அதிபரிடம் கையளித்ததுடன் மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில் இருந்து பெண்கள் மாத்திரம் இன்றைய தினத்தில் பயணிக்கக் கூடிய வகையில் பெண்களுக்கான ஒரு நாள் இலவச பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதேவெளை பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலமொன்று காந்தி பூங்கா முன்பாக ஆரம்பிக்கப்பட்டு மத்திய பேருந்து தரிப்பு நிலையத்தை அடைந்து அங்கிருந்து தாண்டவன்வெளியை சென்றடைந்தது.
இந்நிகழ்வுகளில் அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.