நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டம் இன்று காலை மல்லாவி நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய், மல்லாவி விவசாயிகளால் இணைந்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மல்லாவி அனிஞ்சியன் குளம் பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் மல்லாவி மத்திய பேரூந்து வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நெற்களை உலரவிடுவதற்கான சரியான நெல் தளங்கள் இல்லை எனவும், சில பகுதிகளில் நெல் உலர்த்திகள் காணப்படுவதாகவும் அவர்கள் 5000/6000 கிலோ வரை நெற்களை உலர்த்த கூடியவாறே இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் நெல் உலர்த்திகள் எமது பகுதிகளில் இல்லை எனவும் தாங்கள் தார் வீதிகளில் நெற்களை காயப்போடும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை அறுவடை செய்கின்ற நெல்லினை பச்சையாக கொள்வளவு செய்வோர் 75 கிலோ எடையில் 5500 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல்லை 8000 ரூபாவுக்கும், சிவப்பு நெல்லினை 4500 ரூபாவுக்கும் கொள்வனவு செய்வதாகவும் தெரிவித்தனர்.
குறித்த பகுதிகளில் நெல் உலர்த்திகளையும், களஞ்சியப்படுத்த கூடிய வசதிகளையும் ஏற்படுத்தி தந்தால் நல்லது என்றும் தெரிவித்தனர்
இந்த அரசாங்கம் உடனடியாக நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க முன்வரவேண்டும் என்றும், முகநூல்களில் விவசாயிகளுக்கு உதவுகின்றோம் என்று பதிவை போட்டு விட்டு இருக்காமல் அதனை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்த விவசாயிகள் , விவசாயிகளை இந்த அரசு கவனத்தில் எடுக்காவிடின், விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில் முறைக்குள் தான் போக வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதேவேளை நெல் கொள்வனவாளர்களும் தரகர்களும் எழுந்தமானமாக விலையைத் தீரமானிக்கின்றமை. (பெரும்பாலும் எமது பகுதிகளில் பசளை மருந்து விற்பனையாளர்களே தரகர்களாக இருக்கின்றமையால் மறைமுகமாக விவசாயிகள் நெல்லை அவர்களுக்கே விற்பனை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றமை.)
மரக்கறிகளின் விலை மிகக்குறைவான விலையில் விவசாயிகளிடம் கொள்வனவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றமை.
தத்தி போன்ற நோய்களிற்கு விவசாய ஆராய்ச்சி மூலம் நிரந்தர தீர்வு வழஙகப்படாமை. விவசாய கடன்கள் தேவையான விவசாயிகளுக்கு இலகுவாக சென்றடையாமை போன்ற விடையங்கள் உள்ளடக்கி வடமாகாண ஆளுநருக்கான மகஜர் ஒன்றும் விவசாயிகளினால் கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.











