வட மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வானது கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (15-06) வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.
வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள மாணவ, மாணவிகளுக்காக இதுவரை ‘சிசு செரிய’ பேருந்து சேவைகள் நடைமுறையில் இருக்கவில்லை.
இந்நிலையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியன இணைந்து, முதற்கட்டத்தின் கீழ் வட மாகாணத்தினுள் 20 ‘சிசு செரிய’பேருந்துகளை இயக்குவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளன.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர்,
நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்காக 200-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை ‘சிசு செரிய’ சேவையில் இணைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கென ஒரு பில்லியன் ரூபாவிற்கு அண்மித்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ பேருந்து சேவை, இதுவரை வட பகுதி பாடசாலை மாணவர்களுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை எனவும், இதற்கு முன்னர் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் ஊடாகவே பொதுப் போக்குவரத்துச் சேவையுடன் இணைந்து மாணவர்களின் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இச் ‘சிசு செரிய’ பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இதன்போது மாணவர்களுக்கான போக்குவரத்துப் கட்டணத்தில் பாதி (அரைக்கட்டணம்) மாத்திரமே அறவிடப்படும் என்பதுடன், எஞ்சிய தொகையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.











