யாழ்ப்பாணம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ, மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
கலந்துரையாடலில் பின்வரும் விபரங்களை யாழ்ப்பாண பிராந்திய ஆணையாளர் தெரியப்படுத்தினார்.
2023 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதி 2334/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 01/01/2024 முதல் கட்டாயமாக வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தினை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் 2026 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித்திருத்தச்சட்டத்துக்கு அமைவாக 01/04/2026 முதல்
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பின்வரும் விடயங்களுக்கு அத்தியாவசியமானது எனத் தெரிவித்தார்.
1.வங்கிக் கணக்கைத் திறப்பதற்கு
2.கட்டடத் திட்டத்திற்கான ஒப்புதலைப் பெற்றுக்கொள்வதற்கு
3. ஒரு மோட்டார் வாகனத்தின் பதிவிற்கு
4.மோட்டார் வாகன உரிமம் புதுப்பிப்பதற்கு
5.நிலத்தின் பதிவு அல்லது நிலத்தின் உரிமை மாற்றத்திற்கு
6. இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்குகளை மாற்றுவதற்கு
7.கிரெடிட் கார்ட்டைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமாகின்றது என ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பின்வரும் இலகு நடவடிக்கை மூலம் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரியப்படுத்தினார்.
பதிவு செய்திருப்பின் QR குறியீட்டை பயன்படுத்தி அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் IRD பதிவு / சான்றிதழை சரிபார்க்கவும் என்ற இணைப்பினூடாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசிக்கு OTP இலக்கத்தைப் பெற்று TIN இலக்கத்தை பார்வையிட முடியும்.
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் நிகழ்நிலை (Online) முறைமை மூலமாகவோ அதாவது www.ird.gov.lk அல்லது உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்பிப்பதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும். தற்போது பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கான TIN சான்றிதழ் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு 0212217333 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிய முடியும் எனவும் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.
பிராந்திய ஆணையாளருடனான இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.











