கியூபெக் (Quebec) மாகாணத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் போது, முதலில் பாதிக்கப்படுபவர்களாக 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினரே (Young Adults) இருந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான உண்மை, புதிய மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மொன்றியல் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரப் பள்ளி (ESPUM) மற்றும் சமூக மற்றும் தடுப்பு மருத்துவத் துறை ஆகியவற்றின் இணைப் பேராசிரியரும், பிரபல தொற்றுநோயியல் நிபுணருமான (Epidemiologist) கேட் ஜின்ஸர் (Kate Zinszer) தலைமையிலான சர்வதேச ஆய்வுக் குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
புதிய வைரஸ் அலைகள் மற்றும் சமூகப் பரவல் குழுக்கள் (Community clusters) உருவாகுகையிலேயே, 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆய்வின்படி, கொரோனா பெருந்தொற்றின் ஒவ்வொரு அலையிலும் புதிய சமூகப் பரவல் கொத்துகள் உருவாகும்போது, அதன் முதல் 25 சதவீதப் பாதிப்புப் பட்டியலுக்குள் இடம்பிடிப்பதில் 18 – 29 வயதுடைய இளைஞர்களே முன்னணியில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், எதிர்காலத்தில் உருவெடுக்கும் புதிய வைரஸ் அலைகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கு, இந்தத் குறிப்பிட்ட வயதினரை தீவிர கண்காணிப்புப் வளையத்திற்குள் (Surveillance) கொண்டு வர வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கியூபெக்கில் 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்திற்கும் அதிகமான மனிதர்களின் மருத்துவத் தரவுகளைப் புள்ளியியல் அடிப்படையில் விரிவாக ஆய்வு செய்த பின்னரே, இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.











