வடக்கு மாகாண பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (10) நடைபெற்றது.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், எம். ஜெகதீஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் ஆகியோரின் தலைமையில் இவ்வேலைத்திட்டம் நடைபெற்றது.
மாகாண திறைசேரி அபிவிருத்தி நிதியத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இம்மாடிக் கட்டிடத்திற்காக முதற்கட்டமாக 27 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு வருட காலப்பகுதிக்குள் இதன் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்தில் சுமார் 300 மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன், அவர்களுக்காக ஆய்வகம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் (Smart Class Rooms) இதில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசவாசிகள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.











