விஞ்ஞானி டெனிஸ் லூ (Dennis Lu) மீதான வழக்கில், கனேடிய பாதுகாப்பு உளவு அமைப்பு (CSIS) விசாரணையைத் தானாகத் தொடங்கவில்லை என்றும், அரசாங்கத் திணைக்களத்தின் தகவலின் அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் அரிய உளவு ஆவணம் ஒன்றைச் சமர்ப்பித்துத் தெளிவுபடுத்தியுள்ளது.
கனடா இயற்கை வளங்கள் அமைச்சகத்தில் (Natural Resources Canada) சுத்தமான எரிசக்தி மற்றும் கார்பன் பிடிப்புத் துறையில் சிரேஷ்ட ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய 65 வயதுடைய டெனிஸ் லூ, சீனாவுக்கு இரகசிய ஆவணங்களைப் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார்.
இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் வாதிட்ட நீதித்துறை வழக்கறிஞர் ஷெல்டன் லியூங், “இந்த விவகாரத்தில் உளவு அமைப்பு (CSIS) தானாக எச்சரிக்கைக் கொடியை உயர்த்தவில்லை” என்றும் “மாறாக அரசாங்கத் திணைக்களம் வழங்கிய இரகசியத் தகவலே (Government tip-off) விசாரணைக்கு வித்திட்டது” எனவும் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கனேடிய பாதுகாப்பு உளவு அமைப்பு ஆவணங்களின்படி, விஞ்ஞானி டெனிஸ் லூ தனது உயர் அதிகாரியின் அனுமதி இன்றி சீனப் பிரதிநிதிகள் குழு ஒன்றைத் திணைக்களத்திற்கு அழைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய பாதுகாப்பு உளவு அமைப்பு இந்த விடயம் தொடர்பில், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மத்திய இயற்கை வளங்கள் அமைச்சகத்திற்கு இது குறித்து இறுதி எச்சரிக்கை அறிக்கையை வழங்கியிருந்தது.
எனினும், மத்திய இயற்கை வளங்கள் அமைச்சகம் தனது உள்ளக விசாரணையைத் தொடங்குவதற்கு, 23 மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் பாதுகாப்புப் பிரிவில் தீவிர வளப் பற்றாக்குறை நிலவியதாகவும், வழக்கமான அபாய விசாரணைகளைத் தாண்டி விரிவான புலனாய்வுகளை மேற்கொள்ள அவகாசம் தேவைப்பட்டதாகவும் அப்போதைய தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பிராட் லான்தியர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
விஞ்ஞானி டெனிஸ் லூ சம்பளமற்ற நீண்டகால விடுப்பில் சீனா சென்றிருந்ததும், அங்கு கற்பிப்பதற்கு அனுமதி கோரியிருந்ததும் மத்திய இயற்கை வளங்கள் அமைச்சகத்திற்கு மேலதிக சந்தேகத்தை ஏற்படுத்தியது.
விஞ்ஞானி டெனிஸ் லூ தனது பணிக்காலம் முடிந்து ஓய்வுபெறவிருந்த காலகட்டத்தில், திணைக்களத்தின் பொதுச் சேமிப்பகத்திலிருந்து (Shared drive) சுமார் 2,600க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை நகலெடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக, விஞ்ஞானி டெனிஸ் லூவின் 16 ஆண்டுகாலப் பணி மின்னஞ்சல்கள் மற்றும் அவரது உத்தியோகபூர்வ தொலைபேசி அழைப்புப் பதிவுகள் முதலானவை, முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
கணினியைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் ஒட்டாவா பொலிஸாரின் தேசிய பாதுகாப்புப் பிரிவினால் (INSET) லூ கைது செய்யப்பட்ட, விஞ்ஞானி டெனிஸ் லூ தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











