மொன்றியல் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகில் இயங்கும் புகையிரதப் பாதைகளில், முன்கூட்டியே எவ்வித உத்தியோகபூர்வ
அறிவித்தலையும் வழங்காமல் களைகொல்லி இரசாயனங்களைத் தெளித்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்
கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த களைகொல்லி இரசாயனங்களை கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN Railway) தெளித்துள்ளது. மொன்றியலின் மெர்சியர்-ஹொச்செலாகா-மைசனேவ் (Mercier–Hochelaga- Maisonneuve) பிரதேச சபைக்குட்பட்ட மெர்சியர்-வெஸ்ட் (Mercier-Ouest) பகுதியில் உள்ள விமோன்ட் மற்றும் ஸ்டீன்பெர்க் காட்டுப் பகுதிகளை ஒட்டிய புகையிரதப் பாதைகளிலேயே இந்த இரசாயனங்கள் தெளிக்கப்பட்டுள்ளன.
வீடுகளிலிருந்து சில பத்து மீட்டர்கள் தூரத்திலேயே அமைந்துள்ள இந்தப் புகையிரதப் பாதைகளில், இரசாயனம் தெளிக்கும் வாகனம் ஒன்றின் மூலம் இக் களைகொல்லி திரவம் தெளிக்கப்பட்டுள்ளது.
கனேடிய தேசிய புகையிரத நிறுவனத்தின் (CN) உத்தியோகபூர்வ இணையத்தளத் தகவல்களின்படி, அதன் பராமரிப்புப் பணிகளுக்காகப்
பயன்படுத்தப்படும் டசனுக்கும் மேற்பட்ட களைகொல்லிகளில், ‘கிளைபோசேட்’ (Glyphosate) என்ற நச்சு இரசாயனமும் அடங்கும்.
மனித சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக, மொன்றியல் மாநகராட்சி எல்லைக்குள் ‘கிளைபோசேட்’ இரசாயனப் பயன்பாட்டிற்கு, 2022 ஆம் ஆண்டு முதல் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், புகையிரதப் போக்குவரத்துத் துறை, மத்திய அரசின் (Federal jurisdiction) அதிகார வரம்பிற்குள் வருவதால், மொன்றியல் மாநகராட்சியின் இத்தடையானது, கனேடிய தேசிய புகையிரத நிறுவனத்தைக் கட்டுப்படுத்தாது என்பது குறிப்பிடத் தக்கது.











