சீனாவின் கிழக்குக் கடலோரப் பகுதியான ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள யுஹுவான் அருகே ‘டால்பின்’ புயல் மணிக்கு 151 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றுடன் கரையைக் கடந்தது. இதன் காரணமாகச் சீனா முழுவதும் தீவிர ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புயல் கரையைக் கடந்தபோது வீசிய சண்டமாருதம் காரணமாக அப்பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
புயலின் சீற்றத்தால் ஷாங்காய் நகரின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் இயங்கவிருந்த 1,400-க்கும் மேற்பட்ட விமானங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.
மேலும், ஹாங்சோ விமான நிலையத்தில் சுமார் 270 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டு பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆபத்தான கடலோரப் பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள மலைப்பகுதிகளிலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஷாங்காய், ஜெஜியாங் மற்றும் புஜியான் ஆகிய மாகாணங்களில் 200-க்கும் மேற்பட்ட படகுப் போக்குவரத்துப் பாதைகள் முடக்கப்பட்டுள்ளதுடன், பல முக்கிய ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சீனாவைத் தாக்குவதற்கு முன்பாக, இந்த டால்பின் புயல் ஜப்பானின் ஒகினாவா தீவுகளை மணிக்கு 216 கி.மீ வேகத்தில் மிகத் தீவிரமாகத் தாக்கியது. அதில் 6 பேர் காயமடைந்ததுடன், 50,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும் தைவானின் வடக்குப் பகுதியிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் 180-க்கும் மேற்பட்ட விமான மற்றும் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சீன வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், மத்திய மற்றும் கிழக்கு ஜெஜியாங், ஷாங்காய், அன்ஹுய் மற்றும் ஜியாங்சு ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து மிகக் கனமழையும் நிலச்சரிவு அபாயமும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘நௌல்’ புயல் சீனாவைத் தாக்கிச் சேதங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போது ‘டால்பின்’ புயல் மீண்டும் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.











