தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலை முதலில் கட்டாயமாகப் பாட வலியுறுத்தும் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் நாளை சட்டப்பேரவையில் முன்மொழியவுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய் அவர்களின் பதவியேற்பு விழா மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாதது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழகத்தைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகப் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்தச் சூழலில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்தத் தனித்தீர்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இத்தீர்மானம் சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட பிறகு, அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இதுகுறித்து விவாதித்து, அதன் பின்னர் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2021-ஆம் ஆண்டில் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக முறைப்படி அங்கீகரிக்கப்பட்டு, பொது நிகழ்ச்சிகளில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ள இந்தத் தனித்தீர்மானம் அதை சட்டரீதியாக மேலும் உறுதியாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.











