பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான காரி சயீத் அப்துல் அஜிஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள குபா மசூதிக்குத் தொழுகைக்காகச் செல்லும் வழியில், அங்குள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திய சிறிது நேரத்திலேயே அவர் மசூதியின் நுழைவாயிலில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதால் தான் அவர் உயிரிழந்திருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கொல்லப்பட்ட காரி சயீத் அப்துல் அஜிஸ், ஜம்மு காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினருடன் நடக்கும் மோதல்களில் உயிரிழக்கும் பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் இதர உதவிகளை வழங்கும் முக்கிய பிரிவை நிர்வகித்து வந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பாகிஸ்தான் போலீசார், தீவிர விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் அமைப்பின் மற்றொரு முக்கிய உறுப்பினரான ரிஸ்வான் ஹனிப் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களால் தங்களது அமைப்பைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் வேட்டையாடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
பெஷாவர், கராச்சி, ராவல்பிண்டி, ராவலாகோட் மற்றும் முசாபராபாத் போன்ற நகர்களில் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த அநாமதேயத் தாக்குதல்கள் பயங்கரவாத அமைப்புகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.











