குறுகிய காலத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்றது.
இதன்படி வெள்ளத்தை எதிர்கொள்ள வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் மனிதவளம், நிதி, வாகனங்கள் மற்றும் அவசரகால உபகரணங்களுடன் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சுகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தில், வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேசங்களில் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான குளங்களை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகத் தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆளுநருக்கு அறிவித்தார்.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து வடகிழக்கு பருவமழை தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால், இடர்நிலை முகாமைத்துவத்துக்குத் தேவையான அனைத்து முன்னாயத்தங்களையும் மேற்கொள்ளுமாறு ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
அவசரநிலைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள், வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போதைய காலப்பகுதி வடக்கு மாகாணத்துக்கு அதிகளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் வருகை தரும் பருவமாக இருப்பதால், தமது எல்லைக்குட்பட்ட சுற்றுலாத் தலங்களின் தூய்மையை உறுதிப்படுத்துவதில் உள்ளூராட்சி மன்றங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டும் சம்பவங்கள் தொடர்பான சி.சி.ரி.வி. காணொலிப் பதிவுகளை உரிய பொலிஸ் நிலையங்களுக்கு விரைவாக அனுப்பி சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும்
பணிப்புரை வழங்கினார்.
இதனுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் தூய்மை இலங்கை செயலணி வழங்கியுள்ள வழிகாட்டல்களுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திற்கான ஒருங்கிணைந்த கழிவு முகாமைத்துவ செயற்றிட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, நிர்வாகம், திட்டமிடல் மற்றும் பொறியியல்), உள்ளூராட்சி ஆணையாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர்கள், நகர சபைகளின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.











