இலங்கையில், முக்கியத்துவம் வாய்ந்த உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களின் மீது வெறுமனே ”தேவையான நடவடிக்கைக்காக” என்ற வார்த்தைகளை எழுதி, அடுத்தடுத்த அதிகாரிகளுக்குக் கோப்புகளைக் கைமாற்றி விடும் பழக்கத்துக்கு, உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னர் பெறப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கைகளை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கையாண்ட விதத்தைச் சுட்டிக்காட்டியே, சட்டத்தரணி திலீப பீரிஸ் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள் கிடைக்கும் போது, அதிகாரிகள் வெறும் குறிப்புக்களை மட்டும் எழுதிவிட்டுத் தப்பித்துக்கொள்ளாமல், அத்தகவல்கள் மீது நேரடிப் பொறுப்பேற்று உரிய நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டதாக, சட்டத்தரணி திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி, நடைபெற்ற தாக்குதல் குறித்து அன்றைய அரச புலனாய்வுச் சேவையின் (SIS) தலைவர் வழங்கிய மிக முக்கியமான உளவுத்துறைத் தகவலை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரிவு உள்ளிட்ட நான்கு பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்பி வைத்தமையை, சட்டத்தரணி திலீப பீரிஸ் நினைவுகூர்ந்தார்.
இருப்பினும், நாட்டின் பாதுகாப்பிற்குத் தீவிர அச்சுறுத்தல் நிலவிய அத்தகைய சூழலில், அந்த உளவுத்துறை ஆவணத்தின் மீது வெறுமனே ”தேவையான நடவடிக்கைக்காக” என்ற வார்த்தைகளின் சுருக்கக் குறிப்பை மட்டுமே எழுதி அவர் அனுப்பி வைத்ததாகக் சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சட்டத்தரணி திலீப பீரிஸ், ஒரு நாட்டின் பொலிஸ் தலைவராக இருந்து கொண்டு இத்தகைய ஆபத்தான அச்சுறுத்தலைக் கையாள இந்த அணுகுமுறை போதுமானதா என கேள்வியெழுப்பினார்.
முன்னெச்சரிக்கை தகவல்கள் முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற போதிலும், பேரழிவைத் தடுக்கத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமைக்காகத் தலைமைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரிகள் தங்களுக்குரிய சட்டப்பூர்வ மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விலகி, வெறுமனே ”தேவையான நடவடிக்கைக்காக” என்ற வார்த்தைகளின் சுருக்கக் குறிப்பை எழுதி கோப்புகளை, அடுத்த அதிகாரிகளிடம் தள்ளிவிடுவது பாதுகாப்பை உறுதி செய்யாது என்பதையும், திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.











