இலங்கைக்கு கடத்த பிரப்பன் வலசை கடற்கரைக்கு வேனில் கொண்டுவரப்பட்ட 297 கிலோ கஞ்சா இன்று (8) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடத்தல் காரர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உட்கோட்ட குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் பிரப்பன் வலசை கடற்கரையில ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றை சோதனை செய்தபோது அதில் 297 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வேனுடன் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த பொலீசார் அங்கு நின்று கொண்டிருந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்த களஞ்சீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பொலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் அனைத்தும் ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும், இவை பிரப்பன்வலசை கடற்கரையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்த போலீஸாரல் பறிமுதல் செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும் இது சம்பந்தமாக முக்கிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளிடம் பேசியவர், பிரப்பன்வலசை கடற்கரையில் 297 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்படுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 212 போதை பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 670 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கிலோ 800 கிராம் மெத்தப்பெட்டமன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருவதுடன் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் எச்சரித்துள்ளார்.











