தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் சில முக்கிய நடவடிக்கைகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் இயற்கை வளங்கள், நிலம், நீர் மற்றும் வனப்பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் திரளான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அண்ணாமலை, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை முதன்மையாகக் கொண்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் இயங்கி வந்தடாஸ்மாக் மதுபானக் கடைகளை த.வெ.க அரசு அதிரடியாக மூடியுள்ளது மிகுந்த வரவேற்புக்குரிய நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.
அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், மக்கள் நலன் சார்ந்த நல்ல முடிவுகளை பாராட்டுவது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், புதிய அரசு அமைந்து 100 நாட்கள் மட்டுமே கடந்துள்ளதால் அவர்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்து தற்போதே இறுதி முடிவுக்கு வந்துவிட முடியாது என்றும் தெரிவித்தார்.
அரசின் அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளின் அமலாக்கத்தை தொடர்ந்து பொறுமையுடன் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அண்ணாமலையின் இந்தப் பேச்சு, தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.











