நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்டு 900-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த, 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணாமல் செய்த வெள்ளப் பேரழிவு வழக்கமாகக் கூறப்படும் பனியாற்று ஏரி உடைப்பு (GLOF – Glacial Lake Outburst Flood) அல்லது நிலநடுக்கம் காரணமல்ல என்றும், இமயமலையின் லாங்டாங் லிருங் (Langtang Lirung) சிகரத்தில் ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவே முதன்மைக் காரணம் என்றும் நேபாள சுற்றுச்சூழல் சங்கத்தின் கீழ் செயல்பட்ட விஞ்ஞானிகள் குழு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லெண்டே கோலா பகுதியில் பாறைப் படுக்கையுடன் கூடிய மாபெரும் பனிப்பாறைத் தொகுதி பெயர்ந்து, சுமார் 2,270 மீட்டர் செங்குத்தாகக் கீழே சரிந்து விழுந்தது.
இந்த இடிபாடுகள் மணிக்கு தோராயமாக 167 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்து வந்து வெறும் 7 நிமிடங்களில் 22 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து ஆற்றின் போக்கைத் தடுத்தன.
இதனால் ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக இரு ஏரிகள் உருவாகி, பின்னர் அவை உடைந்ததால் கட்டுக்கடங்காத பெருவெள்ளம் ஏற்பட்டது.
காவோஃபென்-1 (GF-1), சென்டினல் (Sentinel), லேண்ட்சாட் (Landsat) உள்ளிட்ட பல நவீன செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், திபெத் பிராந்தியத்தின் மேல் பகுதியில் உள்ள மூன்று பனிப்பாறை ஏரிகளும் எவ்வித சேதமுமின்றி அப்படியே இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும், இச்சரிவு ஏற்பட்டபோதே 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு உருவாகியுள்ளது.
வெள்ளப் பேரிடருக்குச் சற்று முன்பாக ரசுவாகாதி மற்றும் சப்ருபெசி ஆறுகளில் நீர்மட்டம் திடீரெனக் குறைந்ததே, இந்த பிரம்மாண்ட இடிபாடுகள் ஆற்றை அடைக்கத் தொடங்கியதன் முதல் அறிகுறி என்பதையும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் தெளிவுபடுத்தியுள்ளனர்.











