கேரள மாநிலம் திருவல்லையைச் சேர்ந்த 16 வயதான ரைலன் அணில் என்ற 12-ஆம் வகுப்பு மாணவர், இந்தியாவின் முன்னணி உயர்கல்வித் தேர்வுகளான நீட் (NEET) மறுதேர்வு இணையதளம் மற்றும் ஐ.ஐ.டி ரூர்க்கியால் நிர்வகிக்கப்பட்ட ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) தளங்களின் கிளவுட் சேமிப்பகத்தில் இருந்த மிக முக்கியப் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்வு மையங்களின் விவரங்கள், பார்வையாளர்களின் தரவுகள், தேர்வர்களின் ஹால் டிக்கெட்டுகள் மற்றும் தேர்வு முடிவுகள் போன்ற பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் எவ்விதப் பாதுகாப்பும் இன்றி அணுகக்கூடிய நிலையில் இருந்ததைச் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்ட தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
தற்போது பெற்றோருடன் துபாயில் வசித்து வரும் இந்த மாணவரின் அசாதாரண கணினித் திறமையையும் சைபர் பாதுகாப்புப் புலமையையும் அங்கீகரிக்கும் வகையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஐ.ஐ.டி கான்பூர் நிறுவனம் அவரைத் தனது ‘C3iHub’ சைபர் பாதுகாப்பு புத்தாக்க மையத்தில் இளநிலைச் சைபர் பாதுகாப்புப் பொறியாளராகப் பணியமர்த்தியுள்ளது.
இதன் மூலம் ஐ.ஐ.டி வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் பொறியாளராகப் பணியமர்த்தப்பட்ட நபர் என்ற வரலாற்றுச் சாதனையை ரைலன் படைத்துள்ளார்.
பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து வரும் ரைலன், துபாயில் இருந்தபடியே தொலைதூர ஆலோசகராகப் பணியாற்றுவார் என்றும், கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பாதுகாப்பு பகுப்பாய்வுப் பணிகளில் மட்டுமே அவர் ஈடுபடுத்தப்படுவார் என்றும் ஐ.ஐ.டி கான்பூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறுவயது முதலே ஹேக்கிங் சார்ந்த திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டுத் தனது 8-ஆம் வகுப்பு முதல் சைபர் பாதுகாப்பைக் கற்று வரும் இந்த மாணவரின் சாதனைக்குக் கல்வி மற்றும் தொழில்நுட்ப உலகினர் இடையே பலத்த பாராட்டுகள் குவிந்து வருகின்றன.











