புதுக்கோட்டை அருகே திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெங்கம்மாள் சத்திரத்திலிருந்து பள்ளிக்குச் செல்வதற்காக 8-ஆம் எண் அரசு நகரப் பேருந்தில் 10-க்கும் மேற்பட்ட ஆதி பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பயணித்துள்ளனர்.
அப்போது பேருந்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலின் போது, கதவு அருகே இருந்த ஒரு மாணவியை நடத்துநர் கீழே தள்ளியதாகவும், அதனைத் தொடர்ந்து எதிர்பாராதவிதமாகக் கதவு திறந்துகொண்டதால் அடுத்தடுத்து 8 பள்ளி மாணவிகள் ஓடும் பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டுச் சாலையில் விழுந்தனர்.
இதில் தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்த மாணவிகளை, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி கிராம மக்களும் பழங்குடியின அமைப்பினரும் திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது பகுதியிலிருந்து முதன்முறையாகத் தலைமுறை கடந்து பிள்ளைகள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் படிக்க வருவதாகவும், ஆனால் இலவசப் பயணம் என்பதால் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பழங்குடியின மாணவிகளை அலட்சியமாகவும் அவதூறாகவும் நடத்துவதாக வேதனையுடன் குற்றம்சாட்டினர்.
அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
இச்சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்திய அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல நிர்வாகம், கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் செயல்பட்டதாகக் கூறி சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாணவிகள் ஏறிய பின் ஓட்டுநர் அருகிலுள்ள தானியங்கி கதவு பட்டனை யாரோ அழுத்தியதால் கதவு திறந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் பணியிடை நீக்கம் மட்டும் நிரந்தர தீர்வாகாது என்றும், தங்களது பிள்ளைகள் அச்சமின்றிப் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்று வரக் காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.











