பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கெனத் தனித்துவமான இடத்தைப் பிடித்த இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மஞ்சணத்தி’ எனத் தலைப்பிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது.
பூஜையுடன் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இசைஞானி இளையராஜா திரைப்படத்தின் முதல் காட்சிக்கு கிளாப் அடித்து படப்பிடிப்பை முறைப்படி தொடங்கி வைத்தார்.
இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாரி செல்வராஜ், “இன்று முதல் மஞ்சணத்தியின் தினங்களை தொடங்கி வைத்த எங்கள் இசைஞானிக்கு என்றைக்குமான எங்கள் நன்றியும் அன்பும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா மாரி இணைந்து தங்களது ‘நவ்வி ஸ்டூடியோஸ்’ (Navvi Studios) தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கின்றனர்.
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ‘பரியேறும் பெருமாள்’ கதிர் நடிக்க, முன்னணி நடிகைகளான பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இவர்களுடன் பூர்ணியா ரவி, விது மற்றும் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ் உள்ளிட்டப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
தொடர்ந்து அழுத்தமான சமூகக் கதைக் களங்களைக் கொண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகும் இந்த மஞ்சணத்தி திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படப்பிடிப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.











