தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நேற்று அதிகாலை (11) அடையாளம் தெரியாத நபர் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதல், தவறான அடையாளத்தால் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
காயமடைந்த நபரின் சகோதரரின் வீட்டை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். எனினும், தவறுதலாக வேறு வீடு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் சடலங்கள் இன்று (12) பிற்பகல் அவர்களது வீட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன.
இதேவேளை, மொரட்டுவை, கட்டுபெத்த பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த, எந்தவொரு சூழ்நிலையிலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு காவல்துறையினரையோ பொதுமக்களையோ அச்சுறுத்தி தப்பிச் செல்ல இடமளிக்கப்படாது எனத் தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள், கைக்குண்டுத் தாக்குதல்களை புதிய உத்தியாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.











