மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இறுதி விசாரணையின் போது, மனிதநேயமற்ற முறையில் சக மனிதரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 7 ஆண்டுகள் (Seven-Year Sentence) சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மொண்ட்ரியல் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த இறுதிக்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர், தம் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கான தண்டனை விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டாக ஆரம்பத்தில் பதியப்பட்ட இந்த வழக்கு, பின்னர் விசாரணைகளின் அடிப்படையில் திட்டமிடப்படாத கொலைக் குற்றமாக மாற்றியமைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் விரிவாகப் பரிசீலித்த நீதிபதி, குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன், குற்றவாளி ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தையும் (Time Served) கணக்கில் கொண்டு எஞ்சிய காலத்தைச் சிறையில் கழிக்க உத்தரவிட்டார்.
தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் இழப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட வாழ்நாள் துயரங்கள் குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ‘பாதிக்கப்பட்டோர் தாக்க அறிக்கை’ அங்கு கூடியிருந்தோரை நெகிழச் செய்தது.
“ஒரு மனிதனின் உயிரைப் பறித்துவிட்டு, அதற்குப் பகரமாக நீதிமன்றத்தில் வெறும் வருத்தத்தைத் தெரிவிப்பது தங்களின் இழப்பை ஒருபோதும் ஈடுசெய்யாது” எனப் பாதிக்கப்பட்டவரின் தாயார் தெரிவித்தார். கொல்லப்பட்ட நபரின் திடீர் மறைவால் அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும், குறிப்பாக அவரது குழந்தைகளும் தங்களின் உறைவிட மற்றும் கல்விப் பாதுகாப்பை இழந்து தவிப்பதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர் (Defense Lawyer), தனது கட்சிக்காரர் சிறுவயது முதல் எதிர்கொண்ட மனநலச் சிக்கல்கள் மற்றும் கவனக்குறைவு குறைபாடு ஆகியவற்றைக் குறிப்பிட்டு, அவருக்குக் குறைந்தபட்சத் தண்டனை வழங்குமாறு கோரியிருந்தார். வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதி, வன்முறைக் கலாசாரத்திற்கு எதிராகக் கடுமையான கருத்துக்களைப் பதிவு செய்தார்.
தற்போதைய தண்டனைக் காலத்தில் அவருக்கு உரிய மனநல ஆலோசனைகளும், கோபக் கட்டுப்பாட்டுப் பயிற்சிகளும் (Anger Management) சிறைச்சாலை நிர்வாகத்தால் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.











