யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கு (வெளிச்ச வீடு) பகுதிகளை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 31 வருடங்களுக்கு மேலாக பருத்தித்துறை வெளிச்ச வீடு பகுதியை ஆக்கிரமித்து இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர்.
அதனால் வெளிச்ச வீட்டு பகுதியை மக்கள் பார்வையிடவே , அவற்றை புகைப்படம் காணொளி எடுப்பதற்கோ இராணுவத்தினர் அனுமதி மறுத்திருந்தனர்.
இந்நிலையில் , வெளிச்ச வீடு அமைந்துள்ள பகுதியை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து , சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதனை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை அப்பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் வெளிச்ச வீட்டு பகுதியை பார்வையிட்டார்.
குறித்த பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் முழுமையாக சுற்றிப் பார்வையிடும் வகையில் தேவையான ஏற்பாடுகளை வெகு விரைவில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இவ்வரலாற்றுச் சின்னம் மீண்டும் சேதமடையாமல் நீண்டகாலம் பேணிப் பாதுகாக்கும் வகையிலான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சியையும், எமது பாரம்பரிய மரபுச்சின்னங்களின் பாதுகாப்பையும் ஒருங்கிணைத்து செயற்படுவதே எமது நோக்கமாகும் என வெளிச்ச வீட்டை பார்வையிட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.











