மொன்றியல் நகரில் நிகழ்ந்த, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பின்னால், மிக ஆபத்தான கருத்தியல் தீவிரவாதம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பொலிஸ் அமைப்பான RCMP-இன் தேசியப் பாதுகாப்புப் பிரிவு இந்த வழக்கை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பில் எடுத்துள்ளது.
கொலையாளி எழுதி வைத்திருந்த “அனைவரையும் கொன்று தீருங்கள்” (Kill them all) என்ற வாசகங்கள் அடங்கிய கொள்கை விளக்கப் பிரகடனம் (Manifesto) தற்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பெண்களைத் தீவிரமாக வெறுக்கும் ‘இன்செல்’ (Incel) இணையக் கலாசாரம் மற்றும் மார்க்சிய, சீயோனிச எதிர்ப்பு போன்ற தீவிரக் கொள்கைகளின் கலவையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில், தேசியப் பாதுகாப்புப் பிரிவு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. பெண்களைத் தங்களின் எதிரிகளாகவும், தங்களுக்குப் பாலியல் வாய்ப்புகள் கிடைக்காமல் போவதற்குப் பெண்களே காரணம் என்றும் நம்பும் ஏமாற்றமடைந்த ஆண்களின் இணையக் குழுமமே ‘Incel’ (Involuntary Celibate) எனப்படுகிறது.
கொலையாளியின் ஆவணம் முழுவதும் பெண்கள் மற்றும் உலக முதலாளித்துவத்திற்கு எதிரான அப்பட்டமான வெறுப்புப் பிரச்சாரங்கள் நிறைந்துள்ளன. விரிவாக ஆய்வு செய்யப்பட்ட துப்பாக்கிதாரியின் அந்தப் பிரகடன ஆவணம், அவர் இணைய உலகிற்குள் தீவிரமாகத் தீவிரவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்ததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
கொலையாளி, பிரபல இணையவழி ஆபாசப் பட நிறுவனமான ‘Pornhub’ மற்றும் பொலிஸ் அதிகாரிகளைத் தனது முதன்மை இலக்காகக் கருதினானா என்பது குறித்தும், இந்தத் தாக்குதலுக்காக அவன் ஏன் அல்பெர்ட்டாவிலிருந்து மொன்றியல் வரை பயணித்தான் என்பது குறித்தும் பல மாநில பொலிஸார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, இந்தத் தாக்குதலில் பெண்கள் யாரும் நேரடியாகப் பலியாகவில்லை என்ற போதும்ம், பெண்களைக் குறிவைத்தே கொலையாளி ஆயுதமேந்தியுள்ளான் என்ற தகவல் வெளியானதும் மொன்றியல் நகரில் பெண் உரிமை அமைப்புகள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர்.
போராட்டத்தை ஒருங்கிணைத்த செயற்பாட்டாளர் செலாஸ்ட் ட்ரியானான் (Celeste Trianon) கூறுகையில், “கடந்த 1989 ஆம் ஆண்டு மொன்றியல் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் பெண்ணியத்திற்கு எதிரான வெறுப்பால் 14 பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தற்போதைய சம்பவமும் அதே போன்ற ஒரு பேரழிவின் தொடக்கம் தான் எனவும், கருத்து வெளியிட்டார். இன்செல் கருத்தியல் சார்ந்த வன்முறைகள் நாட்டில் நிகழ்வது இது முதல் முறையல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு டொராண்டோவில் வான் வாகனத்தை ஏற்றி 10 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், 2020 ஆம் ஆண்டு டொராண்டோவில் நடந்த மற்றொரு கொலையும் ‘இன்செல்’ கொள்கை உந்துதலால் நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ ‘பயங்கரவாதத் தாக்குதல்கள்’ என்று நீதிமன்றங்களால் ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.











