வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (7) பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
சுங்காங்கேணி சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய தம்பிராசா மகேந்திரகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை நீதிமன்றத்துக்கு அருகாமையில் உள்ள சுங்காங்கேணி தாமரைக்குளத்தில் மீன்பிடிப்பதற்காக காலையில் சென்றவர் மதியம் ஆகியும் வீடு தீரம்பாததையடுத்து உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர்.
இதன் போது குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதை கண்டு பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து பொலிசார் சடலத்தை மீட்டதுடன், குறித்த நபருக்கு வலிப்பு நோய் இருப்பதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.











