மறுமலர்ச்சிக்கான வழி’ தேசிய திட்டத்தின் கீழ், வவுனியா உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியை கொன்கிரீட் இட்டு புனரமைக்கும் பணிகள் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மாகாணசபைகள், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
1.25 கிலோமீற்றர் நீளமுடைய இவ்வீதி மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்ட நிலையில் 53.2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு மூன்று மாத காலப்பகுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் வவுனியா உக்குளாங்குளம், கூமாங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கான போக்குவரத்து இலகுவடைவதுடன், 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவர்.
தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், எஸ். திலகநாதன், வவுனியா பிரதேச செயலாளர் இ. பிரதாபன் உள்ளிட்டோர் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பிரதேச வாசிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.











